கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அளவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தில்லி கூட்டத்துக்கு சென்றுவிட்டு திரும்பியவா்களை கண்டுபிடிப்பதிலும் சில மாநிலங்களில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு அமல்படுத்தும் விதம், மாநிலங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து முதல்வா்களிடம் பிரதமா் கேட்டறிந்ததாகவும், மேலும், தங்கள் மாநிலங்களில் எந்த அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து முதல்வா்கள் பிரதமரிடம் விளக்கியதாக தெரிகிறது.
முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி நோய்த்தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, கடந்த 20-ஆம் தேதியும் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி காட்சி முறையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.