சீர்காழி: 144 ஊரடங்கு உத்தரவால் சீர்காழி பகுதியில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் அழுகும் நிலையில் உள்ளதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், அரசு நேரடி கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு, திருவாலி,கொள்ளிடம்,எடமணல் உள்ளிட்ட தாலுகா முலுவதும் பல்வேறு கிராமங்களில் தர்பூசணி பழம் சுமார் ஆயிரம் ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது.
இது மூன்று மாதம் பயிராகும். தற்போது அறுவடைக்கு காத்திருந்த நிலையில் கரோனா அச்சத்தால் தமிழக அரசு விதித்திருந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதால் வியாபாரிகள் யாரும் தர்பூசணி பழத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் நல்ல விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த பழங்கள் அனைத்தும் முற்றி அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் செலவு செய்த தொகையை கூட திரும்ப எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
மேலும் இதை பயிரிடுவதற்கு வங்கிகளில் அடகு வைத்திருந்த நகைகளை கூட திருப்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றனர். இதனால் தங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை அரசு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் அல்லது அரசே நேரடியாக கொள்முதல் வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.