புதுதில்லி: கரோனா நோய்த்தொற்று பரிசோதனை கருவிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்க பதிவில், கரோனா நோய்த்தொற்று பரிசோதனை கருவிகளை வாங்குவதை இந்தியா தாமதப்படுத்தியதாகவும், இதன்காரணமாக சோதனை கருவிகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் 10 லட்சம் பேருக்கு 149 பரிசோதனை கருவிகள் என்ற அளவில்தான் இந்தியாவில் பரிசோதனை கருவிகள் தான் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் உலகில் குறைவான பரிசோதனை வசதிகளை கொண்டுள்ள நாடுகளான லாவாஸ்(157), நைஜர்(182), மற்றும் ஹோண்டுராஸ்(162) ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றுக்கு எதிராக போரிடுவதில் பெருந்திரளான மக்களுக்கு பரிசோதனை செய்வது முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்தியாவில், பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், கரோனா நோய்த்தொற்று நெருக்கடியால் மத்திய கிழக்கு நாடுகளில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர் மற்றும் அவர்கள் நாடு திரும்புவதற்கான நம்பிக்கையையும் இழந்துள்ளனர். இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுடன், உதவி தேவைப்படும் தேசத்தின் சகோதர சகோதரிகளை தாயகம் அழைத்து வருவதற்காக விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல் காந்தி.