பெய்ஜிங்: கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவின் வூஹானில் திடீரென கணக்கில் வராத 1290 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதை அடுத்து சீனாவில் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 ஆம் தேதி கரோனா வைரஸ் பரவலை ஒரு நோய்த் தொற்றாக அறிவித்தது. உலகளவில் இதுவரை 21 லட்சத்து 93 ஆயிரத்து 469 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் 82,367 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 3,342 பேர் உயிரிழந்ததாகவும், 77,944 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முறைப்படி அறிவித்தது.
இந்நிலையில், வூஹானில் ஏற்கெனவே கணக்கில் வராத 1,290 உயிரிழப்புகளையும் சேர்த்து கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,636 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் பார்வைக்கு வராமல் வீட்டிலேயே நோய்த்தொற்றால் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.