தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரு வாரத்துக்கு மேலாக வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் முதன்மைச் சாலைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் பரிசோதனை முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மக்கள் வெளியே வருவதைத் தடுப்பதற்காக வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வண்ண அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும், பொதுமக்கள் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் அதிக அளவில் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதைத் தடுப்பதற்காக தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை, ரயிலடி, சிவகங்கை பூங்கா, கீழவாசல் உள்ளிட்ட இடங்களில் முதன்மைச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரு வழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், வாகன போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.