கரோனாவால் இறந்த பெண்ணின் சடலத்தை தள்ளுவண்டியில் கொண்டுசென்ற அவலம்

தேனி மாவட்டம் கூடலூரில்  கரோனா பாதிப்பில் இறந்த பெண்ணின்  உடலை ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால், தள்ளுவண்டியில் மயானத்திற்கு கொண்டு சென்ற அவலம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
கரோனாவால் இறந்த சடலத்தை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்
கரோனாவால் இறந்த சடலத்தை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்

தேனி மாவட்டம் கூடலூரில் கரோனா பாதிப்பில் இறந்த பெண்ணின்  உடலை ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால், தள்ளுவண்டியில் மயானத்திற்கு கொண்டு சென்ற அவலம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளைத் தெருவை சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு  வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் அழைத்துச் சென்றார்.

மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளித்து, கரோனா பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  பரிசோதனை முடிவில் சின்னம்மாளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர் . இதற்கிடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சின்னம்மாள் இறந்தார். இந்த தகவல் கூடலூர் நகராட்சி சுகாதாரப் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறையினர் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிப்பதாக மகனிடம் தெரிவித்துவிட்டுச் சென்றனர். சுமார் 12 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த தெருவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து உடலை எடுக்குமாறு மகனை வலியுறுத்தினர். நகராட்சி சுகாதார பிரிவிற்கு தகவல் தெரிவித்தும் அவர்களிடமிருந்து பதில் கிடைக்காதலால் விரத்தியடைந்த அவர், வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்து, கரோனா பாதிப்பால் இறந்த  தாயின் சடலத்தை மயானத்திற்கு எடுத்து சென்றார்.

கரோனா தொற்று பாதித்தவரின் உடலை பாதுகாப்பு இல்லாமல் தள்ளுவண்டியில், முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தொற்று எளிதாக பரவும் நிலையில் அச்சமடைந்தனர்.

பின்னர் தகன எரிவாய மேடைக்கு கொண்டு சென்று உடல் எரியூட்டப்பட்டது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கரோனாவால் பாதித்தவரின் உடலைப் பாதுகாப்பு இல்லாமல் கூடலூர் தெருக்களில் கொண்டு சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக நடந்துகொண்ட சுகாதார துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com