சங்ககிரி: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் தமிழகர அரசு சார்பில் அமைச்சர், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை மலர்வளையங்கள் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18 ஆம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தையொட்டி கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கும், அதே போல் தமிழகரசு சார்பில் ஈரோடு-பவானி பரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன்சின்னமலை நினைவு சின்னத்திலும் மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.தீபா கனிகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெற்றிவேல், மனோன்மணி, எஸ்.ராஜா, சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி மகேஸ்வரி மருதாசலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடத்தினையொட்டி விடுதலைபோராட்ட வீரருக்கு மரியாதை செலுத்த அரசு சார்பில் 5 பேர்களாக இரு குழுக்களாக மரியாதை செலுத்தினர்.