நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவல்படை உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்பட்டது. இதனை காவல் ஆணையர் அலோக் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய பெண்கள் பாதுகாப்பு துணை ஆணையர் பி.சிக்லா, பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண் காவலர்கள், இருசக்கர வாகனங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறினார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது, எங்களிடம் 100 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. அவை பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும். பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் 12 - 13 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். குறைவான பகுதிகளில் 2 - 3 இருசக்கர வாகனங்கள் ரோந்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.
ஊரடங்கு முடிந்த பிறகு ரோந்து பணியில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.