ஆம்பூர் அருகே கரடி கடித்ததில் ஆடு மேய்ப்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாச்சம்பட்டு கொத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40) ரெட்டிக்கிணறு பகுதியில் திங்கள்கிழமை தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்பகுதியில் குட்டிகளை ஈன்ற கரடி ஒன்று வெங்கடேசனை கடித்தது. இச்சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார். அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று வெங்கடேசனை மீட்டு ஆம்புலன்சில் ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.