போடி, ஆக. 3: போடியில் திங்கள் கிழமை மாலை, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி உள்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி போடி போஸ்பஜாரில் வசிக்கும் மாரியப்பன் மகன் சுப்பிரணி (வயது 55) என்பவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஒரு அறை முழுவதும் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலாம காவலர்கள் ரேசன் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் 140 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதனை போடி உணவு பொருள் கிடங்கியில் எடை போட்டு பார்த்ததில் சுமார் 6 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே வீட்டில் சுமார் 6 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.