கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே டிப்பர் லாரி மோதியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வெத்தலைகாரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 52). இவர் தனது மகனின் திருமணம் ஏற்பாடு தொடர்பாக ஒட்டனூர் கிராமத்திலுள்ள தனது மகள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில், மனைவி சித்ரா (40) உடன் திங்கட்கிழமை சென்றார்.
இவர்கள் இருவரும் ஜெகதேவி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன், சித்ரா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, பர்கூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.