நாகர்கோவில் ஆக.4: திட்டமிட்டு படித்தால் இலக்கை அடைய முடியும் ஐஏஎஸ் தேர்வில் மாநில முதலிடம் பெற்ற கணேஷ் குமார் பேட்டி.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎல், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் குமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்த பாஸ்கர், லீலாவதி தம்பதியின் மகன் கணேஷ் குமார் (வயது 27) அகில இந்திய அளவில் 7ஆவது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து கணேஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
எனது தந்தை பாஸ்கர் மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் குடும்பத்துடன் இருந்ததால் நான் சிறு வயதில் இருந்தே வெவ்வேறு மாநிலங்களில் படித்துள்ளேன். மத்திய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வரை படித்தேன் 10 ஆம் வகுப்பு ஹரியானா மாநிலத்திலும் 12 ஆம் வகுப்பு மதுரை கேந்திரிய வித்யாலயா விலும் படித்தேன்.
பி.டெக் கான்பூரிலும் எம்.பி.ஏ அகமதாபாத்திலும் முடித்தேன். பின்னர் அகமதாபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது இந்தியன் பாரின் சர்வீசில் சேர வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க தொடங்கினேன். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் முயற்சித்து வெற்றி பெற முடியவில்லை. இதனால் எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் வீட்டில் இருந்து படிக்க தொடங்கினேன். இதற்கு எனது பெற்றோர் முழு ஆதரவு அளித்தனர்.
யுபிஎஸ்சி தேர்வுக்காக பிரத்யேக பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் வகுப்பை பின்பற்றி மட்டுமே படித்தேன். தேர்வு நடைபெறுவதற்கு 2 மாதத்துக்கு முன்பே தேர்வுக்கு தயாரானேன். எவ்வளவு தான் பயிற்சி எடுத்திருந்தாலும், தேர்வு நேரத்தில் அதாவது தேர்வுக்கு சில தினங்களுக்கு முன்பிருந்து திட்டமிட்டு படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்.
எனக்கு 100 இடங்களுக்குள் கிடைக்கும் என்று தான் எதிர் பார்த்தேன். ஆனால் ஒற்றை இலக்கத்தில் அதுவும் அகில இந்திய அளவில் 7 ஆம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருப்பவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறலாம் என்றார் அவர்.