பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் உடல்நிலை சீராகி வருவதாகவும், ஆனால் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவின் உடல்நிலை காய்ச்சலால் மோசமடைந்து வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று (செவ்வாய்க் கிழமை) எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெங்களூருவில், ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சித்தராமையா தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து மருத்துவ பரிசோதனை செய்து அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் எடியூரப்பா மற்றும் சித்தராமையாவின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதில் முதல்வர் எடியூரப்பாவின் உடல்நிலை சீராகி வருவதாகவும், காய்ச்சலால் சித்தராமையாவின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.