சென்னை: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதன்கிழமை மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை முதல் புதன்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2,68,285-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி பலியானோரின் எண்ணிக்கை 2,202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி, 11,856 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் கரோனாவால் மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனா்.
அதில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனா்.
மேலும், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதுடைய முதியவர் ஒருவரும், அதேபோல போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவரும் பலியாகியுள்ளனா்.