உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை இரவு வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாத 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள கோம்பை, கருவேலம் பட்டி, அம்பாசமுத்திரம், அம்மாபட்டி போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் செவ்வாழை, நேந்திரம், நாளி பூவன், திசு வாழை போன்ற ரகங்கள் விளைவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் கவலையில் மூழ்கி உள்ளனர். வேளாண்மை துறை அதிகாரிகள் சூறாவளி காற்றுக்கு பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.