விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே பழமை வாய்ந்த தாழிகள் கிடைத்துள்ளதால், அங்கு அகழ்வாய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே கொடுக்கூர் என்ற கிராமத்தில் செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டும்போது, பழமையான முதுமக்கள் தாழி, குடுவை, எலும்புகள், பானை ஓடுகள், செங்கற்கள் போன்றவை கிடைத்துள்ளன.
பழமையான பொருட்கள் கிடைத்ததை அடுத்து, தொல்லியல் ஆர்வலர்கள் வந்து, கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.
தகவலறிந்த விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், வியாழக்கிழமை தொல்லியல் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இங்கு கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அகழாய்வு நடத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக, மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார்.