நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கன மழை அவலாஞ்சி பகுதியில் 581 மி மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பலத்த காற்று வீசியதால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாலை, வீடுகளின் மீது விழுந்தன. எடக்காடு பகுதியில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒரு போலீஸ், இரு தீயணைப்புத் துறையினருக்கு காயம் ஏற்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய மீட்புப் படையினா் குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அதேபோல, நக்ஸல் தடுப்புப் பிரிவினரும் களத்தில் இறங்கியுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 581 மி.மீ. பதிவாகியுள்ளது. அதேபோல் கூடலூர் 335 மி.மீ, அப்பர் பவானியில் 319 மி.மீ, மேல் கூடலூர் 305 மி.மீ, நடுவட்டம் 226 மி.மீ, கிளன்மார்கன் 212 மி.மீ, தேவாலா 220 மி.மீ, எமரால்டு 175 மி.மீ, பந்தலூர் 181 மி.மீ, சேரங்கோடு179 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மின் விநியோகம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் பாதிக்கப்பட்டு உள்ளது
ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காற்று, மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாராக இருக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.