திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு சாலையை அகலப்படுத்தும் பணிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான 16.69 சென்ட் நிலத்தை தொழிலாதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினார்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைக்கு உள்பட்ட மாநகராட்சி 25 ஆவது வார்டில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக தொழிலதிபர் ஏ.முத்துகுமாரசாமி(வயது 60) மற்றும் அவரது சகோதரிகள் வி.முத்துலட்சமி, கே.பழனாத்தாள், கே.பாலாமணி, பி.பத்மாவதி ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 16.69 சென்ட் நிலத்தை தானமாக வழங்க முன்வந்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.
இதையடுத்து, நிலத்தை தான கிரையம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தொழிலதிபர் ஏ.முத்துகுமாரசாமி 16.69 சென்ட் நிலத்தை சாலையை அகலப்படும் பணிக்காக தான கிரையமாக மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமாரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மாநகர பொறியாளர் ரவி, முன்னாள் மண்டலத் தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.