அமராவதி அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடியே பாக்கி உள்ள நிலையில் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. அணையின் கொள்ளளவு 4065 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அணைக்கு தற்போது அதிகபட்சமாக 11 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது.
மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு,தேனாறு, பாம்பாறு ஆகிய இடங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 83 அடியை எட்டி உள்ளது.
நேற்று வியாழக்கிழமை அணையிலிருந்து அமராவதி ஆற்றிலும் பிரதான கால்வாயிலும் விநாடிக்கு 2440 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் தற்போது 83 அடியை தாண்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடியே பாக்கி உள்ளது.
இந் நிலையில் அணையில் உபரி நீர் திறந்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து அமராவதி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாய் இருக்குமாறு இதன் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.