கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றி மின்கம்பங்கள் பற்றி, தினமணி இணையதளத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, மின்வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுத்து கம்பங்களை மாற்றியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான நிலையில் மின்சாரக் கம்பங்கள் இருந்தன. வடபாதிமங்கலம் பிர்காவில், கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் பிரதான சாலை வால்பட்டறை என்ற இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
100 கேவி கொண்ட இந்த மின்மாற்றியிலிருந்து, கீழ உச்சிவாடி, திட்டச்சேரி, அரிச்சந்திரபுரம் பள்ளிக் கூடம் தெரு , காமராஜர் தெரு உள்ளிட்ட தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளுக்கும் மின்சப்ளை சென்று கொண்டிருக்கிறது.
சிமிண்ட்டால் ஆன இந்த மின்சாரக் கம்பத்தின் அடிப்பாகத்தில் இருந்து, மின்மாற்றி பொருத்தியிருக்கின்ற மேல் பகுதி வரையிலும், சிமிண்ட் பெயர்ந்து, மின் கம்பங்கள் முறிந்து, டிரான்ஸ்பார்ம் எந்த நேரத்திலும் சாய்ந்து, பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய ஆபத்தான நிலையில் இருந்தன.
மேலும், கஜா புயலில் மின் கம்பங்கள் சிறிது சாய்ந்தும் இருந்தன. இதுபற்றி ஜூன் 18 ஆம் தேதி, தினமணி இணையதளத்தில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, பார்வையிட்ட மின்வாரிய மாவட்ட அதிகாரியின், உத்தரவின் பேரில், ரூ. ஒரு லட்சம் மதிப்பீட்டில், இரண்டு மின் கம்பங்களையும் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய மின் கம்பங்கள் மாற்றப்படுவதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மின்சார வாரியத் துறையினருக்கும், தினமணி இணையதளத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.