ஈரோடு: பவானிசாகர் அணை ஒரே நாளில் 4 அடி உயர்ந்ததை அடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள சிறு நீரோடைகள் வழியாக வரும் தண்ணீர் மூலம் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாள்களில் கிடு கிடு வென உயர்ந்து இன்று காலை 6 மணி நேர நிலவரப்படி 94.85 அடியாக உள்ளளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 39,617 கன அடியாக அதிகரித்து உள்ளது. அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன அடி நீரும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 500 கன அடியும் நீரும் என 900 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டும் வருகிறது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் இரண்டு நாளில் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வரலாற்றை சார்பில் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் ஐயப்பன் கோவில் படித்துறை பகுதி விநாயகர் கோவில் படித்துறை போட்டு வீரம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மேடான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். பவானி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.