பெங்களூரு: கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கர்நாடக இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி.எம்.சி) எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடலோர கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னடம், பாகல்கோட், பைதர், கலாபுராகி, ராய்ச்சூர் ஆகிய வடக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சிக்மங்களூர், ஹாசன், குடகு, சிவமோகா ஆகிய தெற்கு பகுதிகளிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 284 மி.மீ மழை பதிவாகியுள்ளது. உத்தர கன்னடா, தட்சிண கன்னடா பகுதிகளில் 115 முதல் 204 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (செவ்வாய்க் கிழமை) அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த நாள் முதல் (புதன்கிழமை) படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.