இடுக்கி: கேரளத்தில் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி புதையுண்ட தமது எஜமானரை தேடி, அவரது வளர்ப்பு பிராணியான நாய் அப்பகுதியிலேயே சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி ஆகிய பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் மண்ணிற்கடியில் சிக்கினர்.
இதில், திங்கட்கிழமை வரை 20 ஆண்கள், 19 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள், 6 மாத குழந்தை என 49 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்று வரும் மீட்பு பணியில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியோனோர் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது.
மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தமிழகப் பகுதிகளிலிருந்து வந்துள்ள அவர்களது உறவினர்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், நிலச்சரிவில் சிக்கி புதையண்ட தோட்டத் தொழிலாளர்களுள் ஒருவரான தமது எஜமானரைத் தேடி, மீட்பு பணி நடைபெறும் இடத்தில் அவரது வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்கிறது.
உடல்கள் மீட்கப்படும் போது ஓடிச் சென்று பார்ப்பதும், பின்னர் மண்ணில் புதையுண்ட குடியிருப்பு பகுதியில் ஏக்கத்துடன் காத்திருப்பதுமாக அதே பகுதியில் சுற்றி வரும் நாய் காண்போரை கண்ணீர் மல்கச் செய்கிறது.