சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர்கள் முத்துராஜ் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இச்சம்பவத்தை கொலை வழக்காக சிபிசிஐடி காவலர்கள் பதிவு செய்து 10 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இவ்வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்துள்ளன. தடயங்கள் அனைத்து சேகரிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்கினால், காவலர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். ஆகவே ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், மனுதாரர் இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக சிபிஐயை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.