லண்டன்: பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி நாள் தோறும் ஆயிரக் கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.
அந்த வைரஸால் பிரிட்டனில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் 1,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 3,22,280 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் கடந்த 28 நாள்களுக்குள் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41,403 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்காட்லாந்தில் மட்டும் புதிதாக 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இது மூன்று மாதங்களில் அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாகும்.