கும்பகோணம்: கும்பகோணம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே நடுவக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (30). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இவர் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு வியாழக்கிழமை இரவு சென்றார். மதுபானம் வாங்கிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஏற முயன்ற இவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சரண்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த திருவிடைமருதூர் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சரண்ராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்வதற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரண்ராஜூக்கும் காங்கேயம்பேட்டையைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காங்கேயம்பேட்டையைச் சேர்ந்த சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.