ஸ்ரீவில்லிபுத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்த கடிதம் போடும் பெட்டியில் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 58 மாத பஞ்சப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதிய நிலுவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2019 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். 2009 பென்ஷன் சீராய்வு குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
மேலும் 24.9.2019 சென்னை பல்லவன் இல்ல முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றபோது அப்போதைய முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக 45 நாள்களில் மேலே உள்ள கோரிக்கைகளை முடித்து தருவதாக கூறியதை இந்த நாள் வரை இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் ஓய்வு பெற்ற நல அமைப்பினர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு 31.8.2020 வரை போஸ்ட் கார்டு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு கிளை தலைவர் தங்கமாரி தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பழம் உட்பட பலர் கலந்து கொண்டனர்