விவசாயிகளுக்கு எதிராக போராட மத்திய அரசு தயாராகிவிட்டது என சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சுக்பீர் சிங்,
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கூடாது என்ற மத்திய அரசின் நிலைபாட்டை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக அவர்கள் போராட முடிவு செய்துவிட்டார்கள் என்பது இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பு நிரூபிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதற்கு முன், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியதோடு, மத்திய அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.