வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(சனிக்கிழமை) தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடனான 5 கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்களில் ஒருசில திருத்தங்களை மேற்கொள்வதாக மத்திய அரசு அளித்த வரைவு முன்மொழிவையும் விவசாயிகள் நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும், மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தில்லி நோக்கி மேலும் 700 டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுத்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, தில்லி நகரை இணைக்கும் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. தில்லிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
போராட்டம் குறித்து பாரதீய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் எஸ்.ராஜேவால் பேசுகையில்,
டிசம்பர் 12 ஆம் தேதி, டெல்லி - ஜெய்ப்பூர் சாலையைத் தடுத்து மறியலில் ஈடுபடவுள்ளோம். மேலும், 14 ஆம் தேதி பாஜகவின் மாவட்ட அலுவலகங்கள், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் ரிலையன்ஸ் / அதானியின் சுங்கச் சாவடிகள் முன்பு போராட்டத்தை நடத்துவோம்.
போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் தற்போது ஈடுபடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.