கர்நாடகப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
கர்நாடகப் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், இன்று மாலை முதல் பேருந்து சேவைத் தொடரும் எனவும் கர்நாடக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கெளரவத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகளையும், ஊக்கத்தொகைகளையும் வழங்க வேண்டும் என்றும், கரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் வழங்குவதைப் போல போக்குவரத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம், கர்நாடக போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கர்நாடக துணை முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய முதல்வர் எடியூராப்பா, வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், இன்று மாலை முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள் தொடரும் எனவும் கர்நாடக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கெளரவத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.