கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் கடைகளில் பெயர்களை தமிழில் வைக்க துண்டுப்பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் பல கடைகள் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அரசாணையின்படி தமிழில் அமைக்கப் படுவதில்லை.
இந்நிலையில், ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை கம்பத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பெயர்ப்பலகைகளில் அரசாணைப்படி ஐந்து பங்கு தமிழ் எழுத்துக்களிலும், மூன்று பங்கு ஆங்கில எழுத்துக்களிலும், இரண்டு பங்கு இதர மொழிகளிலும் வைக்குமாறு வலியுறுத்தி அரசாணை சுற்றறிக்கையை துண்டு பிரசுரங்களாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோ, தேனி மாவட்ட தமிழ் இயக்க செயலாளர் கவிஞர் பாரதன், கவிஞர் திராவிடமணி, பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சேதுமாதவன், புவனேஸ்வரி, பழனியம்ம்மாள், தர்மர், ராஜா ஊதிய மைய நூலககர்கள் மணிமுருகன், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.