காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை நல்லடக்கம் செய்த பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலரை எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா செவ்வாய்க்கிழமை பாராட்டினார்.
காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் பணி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஜி.சம்பந்தம் தலைமையில் நடைபெற்றது. பணி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.க்கள் பி.தனுசு, வி.எஸ்.பன்னீர் செல்வம், பணி ஓய்வு பெற்ற ஆய்வாளர் வி.தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஒருங்கிணைப்பாளர் டி.உத்தமராஜன் வரவேற்று பேசினார். பொதுக்குழு கூட்டத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் இதுவரை 1,323 அனாதை சடலங்களை நல்லடக்கம் செய்த பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் ஜி.ஆர்.சீனிவாசனை காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா சால்வை அணிவித்து அவரது சமூக சேவைகளைப் பாராட்டினார். சங்கத்தின் துணைத் தலைவர் சி.கண்ணபிரான் நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.