விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கையைப் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனுவுடன் வந்தார்.
திடீரென தனது கையில் கத்தியால் கிழித்துக் கொண்டு தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் போலீசார் அவரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில், சொத்துப் பிரச்சினையில் தனது இளைய மகன் சிலம்பரசன் தன்னை மிரட்டி கொலை செய்ய முயற்சிப்பதாகவும், ஏற்கனவே மற்றொரு மகன் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளிக்க வந்து, தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.