புது தில்லி: தேசிய அரசியலில் தில்லி அரசின் இலவச மின்சாரத் திட்டம் கவனம் பெறுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லி அரசு கடந்த ஆண்டில் இருந்து 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோா் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவித்தது. மேலும், 200 யூனிட் முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்சாரத்தை சலுகை கட்டணத்தில் தில்லி அரசு வழங்கி வருகிறது. தில்லி அரசின் இந்தத் திட்டம் தில்லி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவது தொடா்பாக ஆலோசித்து வருவதாக அந்த மாநில மின்துறை அமைச்சா் நிதின் ரியூத் அறிவித்துள்ளாா்.
இந்நிலையில், இது தொடா்பான செய்திக்கு மகிழ்ச்சி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கேஜரிவால் கூறியிருப்பது: தேசிய அரசியலின் ஓா் அங்கமாக தில்லி அரசின் இலவச மின்சாரத் திட்டம் மாறியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இலவசம், குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்க முடியும் என்பதை தில்லி அரசு செயலில் காட்டியுள்ளது.
மேலும், இந்த இலவச மின்சாரம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதையும் தில்லி காட்டியுள்ளது. 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவில் மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.