மீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள எம்பிஏ படிக்கும் கல்லூரி மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீரட்டைச் சேர்ந்த எம்பிஏ மாணவி ஒருவர் கல்லூரியில் இருந்து வழக்கம்போல் மாலை வீடு திரும்பும் போது, நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு வராத நிலையில், அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது செல்லிடை பேசியை தொடர்புகொண்ட போலீஸார், புலந்த்சாகர் மாவட்டம் சியானா கோட்வாலி சென்ற போது அங்கு மாணவிக்கு நடந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை 4 பேர் கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொன்டுமை செய்துள்ளனர். அவர்களுடன் மாணவி கடுமையாக போராடியபோது அவரை கம்பியால் தாக்கி கொடுமைப் படுத்தியுள்ளனர். இதில், மாணவி பலத்த காயங்களுடன் மயக்கமான நிலையில் கிடந்துள்ளார்.
பலத்த காயமடைந்த மாணவியை மீட்ட போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீரட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரையும் தேடி வருவதாக துணை காவல்கண்காணிப்பாளர் கர்முக்தேஷ்வா கூறியுள்ளார்.
தில்லியில் துணை மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நடந்த கொடுமை போன்று, சியானா கோட்வாலியில் எம்பிஏ மாணவிக்கு நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.