அவிநாசி விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஈரோடு அருகே கைது

அவிநாசி அருகே கண்டெயனர் லாரி மோதியதில் கேரள அரசு சொகுசு பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழப்புக்கு காரணமான
அவிநாசி விபத்திற்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஈரோடு அருகே கைது


ஈரோடு: அவிநாசி அருகே கண்டெயனர் லாரி மோதியதில் கேரள அரசு சொகுசு பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழப்புக்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநரை ஈரோடு அருகே போலீஸார் கைது செய்துள்ளனர். 

கேரள மாநில சாலை போக்குவரத்து துறைக்குச் சொந்தமான சொகுசு பேருந்து கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளம் மாநிலம் எர்ணாகுளம் நோக்கி புதன்கிழமை இரவு 8 மணி அளவில் புறப்பட்டது. இந்தப் பேருந்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 25 பேரும், பாலக்காட்டைச் சேர்ந்த 4 பேர், திருச்சூரைச் சேர்ந்த 19 பேர் எனமொத்தம் 48 பேர் பயணம் செய்தனர். 

இந்தப் பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் அதிகாலை 3.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி 50 டன் எடைகொண்ட டைஸ்ஸ் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.  இந்த நிலையில், அதிகாலை நேரமாக இருந்ததால் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கண் அயர்ந்ததாகத் தெரிகிறது. 

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலை மையத்தடுப்பையும் தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உள்பட 13 பேரும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 6 பேர் என மொத்தம் 19 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை 24 பேர் கோவை, அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 5 பயணிகள் லேசான காயமடைந்ததாகவும் தெரிகிறது. 

இந்நிலையில், விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேம்ராஜ் என்பவரை ஈரோடு அருகே  திருப்பூர் மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com