திருச்சி: பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அஸ்திவாரமும் இல்லை, ஆதரவும் இல்லை என்று திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சு.திருநாவுக்கரசர் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் காலத்திருலிருந்து பேசப்பட்டு வரும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நல்லது.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அஸ்திவாரமும் இல்லை, ஆதரவும் இல்லை. மோடி பிரதமரான பிறகு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. வேலையின்றி உள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவோ, புதிய தொழிற்சாலைகளோ வரவில்லை.
மக்களவைத் தேர்தல் வெற்றியை போல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார்.
குடியிரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு தாங்கள் செய்வது சரிதான், நாங்கள் அதை மாற்ற மாட்டோம் என்றால் அதற்கான பலனை தேர்தல் மூலம் மக்கள் தான் தருவார்கள். அதை அனுபவித்தாக வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.