ஓமலூர் சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி

ஓமலூர் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஓமலூர் சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி


ஓமலூர் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் ஏழு பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். 

நேபாள நாட்டின் காத்மாண்டுவை சேர்ந்த 32 பேர் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களுக்கு மினி பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர். இந்த பேருந்தை காத்மாண்டுவை சேர்ந்த கவுல்ராம் சௌதாரி, இட்டோடி சுந்தாரி ஆகிய இரண்டு ஓட்டுநர்களும் மாற்றி மாற்றி ஓட்டி வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் 32 பேரும் கன்னியாகுமரி சென்று, கோவில்களை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ராஜஸ்தான் செல்வதற்காக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். புதன்கிழமை அதிகாலை ஓமலூர் அருகேயுள்ள நரிப்பள்ளம் என்ற இடத்தில் வரும்போது அங்குள்ள காளியம்மன் கோவில் மண்டபத்தில் ஒய்வு எடுத்துவிட்டு காலையில் செல்லலாம் என்று, இடது பக்க சாலையில் இருந்து வலதுபக்க சாலைக்கு மினி பேருந்தை ஓட்டுநர் கவுல்ராம் சௌதாரி திருப்பினார். அப்போது பெங்களூரில் இருந்து கேரளம் சென்ற ஆம்னி பேருந்து, நேபாள சுற்றுலா பயணிகள் வந்த பேருந்தின் நடுப்பகுதியில் பலமாக மோதியது. இந்த விபத்தில் நேபாளிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், பேருந்தில் வந்த 28 பேர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும், மூன்று பேர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு முராரி என்பவரை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்தில்,  பீர்பதூர் ராய், டிக்காராம், கோபால் தமன், போதினி, புல்கரி சவ்திரி, விஷ்ணு தங்கல் மற்றும் முராரி ஆகிய எட்டுபேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்தோரின் சடலங்களை நேபாளத்திற்கு எடுத்து செல்வது குறித்து ஆலோசனை செய்வதற்காக நேபாள தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சேலம் வருகை தர உள்ளதாக தெரிகிறது. சேலம் மாவட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியபிறகு, சடலங்களை நேபாளத்திற்கு கொண்டு செல்வதா அல்லது சேலத்திலேயே அடக்கம் செய்வதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com