புவனேஸ்வர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகை இந்தியாவுக்கு பயனளிக்காது, ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறினாா்.
புவனேஸ்வரில் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகை இந்தியாவுக்கு எந்த பயனும் அளிக்காது, ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.
"அமெரிக்காவை வலுப்படுத்துவதற்காக சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் இருக்கலாம், அதனால் அவருடைய நாட்டின் பொருளாதாரமாதான் உயரும். எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவிடம் நாம் வாங்கும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு நாம்தாம் பணம் செலுத்துகிறோம், அதை அவர் ஒன்றும் இலவசமாக கொடுக்கப் போவதில்லை" என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, நாட்டின் பொருளாதார தேக்கநிலையை வெளிப்படையாகவே விமர்சித்ததுடன், இந்த நூற்றாண்டின் மிக மோசமான செயல் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு எனவும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.