திருநெல்வேலி: வடகிழக்கு தில்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவிவிலக வேண்டும் என்றார் மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனர் தலைவர் டிராபிக் ராமசாமி.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்திருப்பதாகவும், மைதானத்திற்குள் பொதுமக்களை அனுமதிப்பதில்லை என்றும் இங்குள்ள சிலர் எனக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது குறித்து பேசவுள்ளேன். அதற்கு முன்பாக வ.உ.சி மைதானத்திற்கு வந்து பார்த்தேன். நான் வருவதற்கு முன்பாகவே பேனர்களை போலீஸார் அகற்றிவிட்டனர்.
இது பொதுமக்களுக்கான விளையாட்டு மைதானம். இதில் மேடை அமைத்து விளையாட்டு போட்டி நடத்த யார் அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டதற்கு, "நான் அனுமதி கொடுக்கவில்லை' என கூறினார். இதற்கு அனுமதி அளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்றார்.
மேலும் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகவேண்டும். இது தொடர்பாக திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். மக்கள் விரும்பாத சிஏஏ சட்டத்தை 6 மாத காலமாவது தள்ளிபோடலாம் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.