வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றியத்தில் மொத்தம் இருந்த 107 தபால் வாக்குகளில் 99 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 108 பதவிகளுக்கு 203 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த வாக்கு எண்ணிக்கை ஒரு ரவுண்டுக்கு 14 மேஜைகள் அடிப்படையில் தற்போது வாக்குச் சீட்டுகள் தனித்தனியாகப் பிரிக்கும் பணி இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ளது. முதலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதற்கடுத்து ஊராட்சி தலைவர், அடுத்து ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான எண்ணிக்கை அறிவிக்கப்பட உள்ளது.
மொத்தம் 7 அறைகளில் 220 அலுவலர்கள், 65 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரியா, தாமஸ்ராஜன், ராஜலட்சுமி ஆகியோர் தேர்தல் நடத்தும் (வாக்கு எண்ணிக்கை) அலுவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். அனைத்து முடிவுகளும் வெளியாவதற்கு இரவு 9 மணியாகலாம் எனத் தெரிகிறது.