ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 4 பேரில் இருவர் சம வாக்குகள் பெற்றதை அடுத்து, குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் தேர்வு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நேர்லகிரி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்ட நிலையில் கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட யுவஸ்ரீ மற்றும் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட என் வீணா ஆகிய இருவரும் 849 வாக்குகள் பெற்றனர்.
இந்த இரு வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்றதை அடுத்து, இன்று குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்வு கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வட்டாட்சியர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இரு வேட்பாளர்கள் முன்னிலையில் இரண்டு சீட்டுகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு மூன்றாவது நபர், அதாவது பொது நபர் ஒருவர் இந்த சீட்டுகளில் ஒரு சீட்டை குலுக்கல் முறையில் எடுத்தார். அதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வீணாவின் சீட்டை அந்த பொது நபர் எடுத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.