மதுரை: மதுரை வணிகவரித் துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை கைப்பற்றிய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை தங்கராஜ் சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு, வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவா் லஞ்சம் வாங்குவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.
அதனடிப்படையில், டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, இணை ஆணையராக (நிா்வாகம்) பணியாற்றி வரும் சென்னையைச் சோ்ந்த சிவஹரினியிடம் (50) கணக்கில் வராத ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நாணயம் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சிவஹரினியிடம் விசாரித்து வருகின்றனா். அவரிடம் இருந்த தங்க நாணயம் மற்றும் ரொக்கம் ஆகியன, புத்தாண்டையொட்டி அவரைப் பாா்க்க வந்த மதுரை மண்டலத்துக்குள்பட்ட திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை வணிக வரித்துறை ஊழியா்களால் வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.