ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்பது தேசவிரோத செயல்: சுப்பிரமணியன் சுவாமி
புதுதில்லி: ஏர் இந்தியாவின் தனியார்மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் அதனை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும், இணைப்பு நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. இதுதொடர்பான அறிவிப்பில், ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகள் மற்றும் இணைப்பு நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முழுமையாக கையகப்படுத்தலாம்.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், நிறுவனத்தை வாங்குபவர்கள் அதன் ரூ.2,300 கோடி ரூபாய் கடனையும் ஏற்க முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டிவிட்டர் பக்க பதிவில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் இந்த முடிவு, தேச விரோதமானது. இதனை தடுப்பதற்கு நீதிமன்றம் செல்வேன். எங்கள் குடும்ப சில்வரை விற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.