பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான (ஐ.டி) விப்ரோவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருந்து ஆபித்அலி நீமுச்வாலா குடும்ப கடமைகள் காரணமாக பதவி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியை அடையாளம் காண இயக்குநர்கள் குழு ஒரு தேடலைத் தொடங்கியுள்ளதாகவும், புதிய நபர் பொறுப்பேற்கும் வரை, ஆபித்அலி நீமுச்வாலா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில் தொடருவார் என்று விப்ரோ விளக்கம் அளித்துள்ளது.
விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக “விப்ரோவின் சர்வதேச வளர்ச்சிக்கு, ஆபித் தலைமையையும் விப்ரோவுக்கு அவர் செய்த சிறப்பான பங்களிப்பிற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2015 முதல் விப்ரோ நிறுவன குழுத் தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்து வந்த நீமுச்வாலா, 2016 பிப்ரவரி 1 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்ப துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ளார்.
விப்ரோவுக்கு வருவதற்கு முன்பு, டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வணிகம், தொழில்நுட்பம், விற்பனை, செயல்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் துறைகளில் முக்கிய தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். அவர் 2010 ஆம் ஆண்டின் பிபிஓ தலைமை நிர்வாக அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டவர்.