புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியில் கனரா வங்கியுடன் இணைக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிக் கிளை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து எல்ஐசி முகவர் ஒருவர் வந்து சென்றுள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வங்கிக் கிளையில் கிருமிநாசினி தெளித்த நகராட்சிப் பணியாளர்கள், வங்கிக் கிளையை மூடி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
கரோனா பாதித்த பணியாளர் ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
வங்கிப் பணியாளர்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அன்னவாசல்: அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் சத்துணவுத் திட்டப் பணியாளருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்தோருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே மெர்க்கண்டைல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கிக் கிளைகள், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம் போன்றவை கரோனா தொற்றால் மூடப்பட்டு படிப்படியாக திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.