புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,48,315 -ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,48,315-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களாக தினசரி பாதிப்பு 20,000-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் நேற்று 442 பேர் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18,655-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் 2,35,433 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,94,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.
தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.
பாதிப்பு: 6,48,315
பலி: 18,655
குணமடைந்தோர்: 3,94,227
சிகிச்சை பெற்று வருவோா்: 2,35,433