சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில்அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவலர்களால் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் என்பவரை அவரது சொந்த ஊரான விளாத்திகுளம் அருகே பூசனூர் கிராமத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பீர் முகைதீன், விளாத்திகுளம் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை ஆகியோர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் முத்துராஜ் கொண்டு வரப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மேற்கொண்ட பிறகு சனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஜூலை 17 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து பேரூரணி சிறையில் முத்துராஜ் அடைக்கப்பட்டார்.