சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது: இளம் வழக்குரைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான தகுதி குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து, தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்குரைஞர் தொழில் பயிற்சி செய்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞரிடம் இருந்து கடிதம் பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். என்பது உள்ளிட்டவை இந்த உதவித்தொகையை பெறுவதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உதவித்தொகை பெற வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை விசாரித்து, சட்டப்பணிகள் இயக்குனருக்கு அனுப்பி வைத்து அதன்பின் தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும்.
ஆண்டுக்கு ஆயிரம் வழக்குரைஞர்கள், இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் http://ams.bctnpy.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.