திருப்பூர்: முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரில் வாகனப்போக்குவரத்து இல்லாததால் சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடின. மேலும், மாநகரில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஜூலை மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம்
இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகனப்போக்குவரத்து இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. இதில், பொதுமக்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி பகுதி, ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் அதிக அளவிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றும் நபர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல் துறையினர் இரு சக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் திருப்பூர் காமராஜர் சாலை
மேலும், குமரன் சாலை, காமராஜர் சாலை, தென்னம்பாளையம் உழவர் சந்தை, பூமார்க்கெட், காய்கறி மார்க்கெட், மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் பால் முகவர்கள் வாகனங்களில் எடுத்துச் சென்று பால் விநியோகம் செய்து வருகின்றனர். மீன், ஆட்டிறைச்சிக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.150 கோடி வரையில் உற்பத்தி பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படங்கள்: எஸ். மணிகண்டன்.